திருவண்ணாமலை, செப். 13 –
திருவண்ணாமலை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பெருங்குப்பை உற்பத்தியாவர்களுக்கான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை எதிரிலுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் எஸ். செல்வபாலாஜி தலைமையில் நடந்தது. துணை மேயர் சு. ராஜாங்கம், வார்டு உறுப்பினர் அருணாரவி ஆகியோர் முன்னிலை வகிக்க சுகாதார ஆய்வாளர் வி.எம். மால்முருகன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மூத்தோர் தடகள சங்க மாநில துணைத்தலைவர் ப. கார்த்திவேல்மாறன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் ஓட்டல் சங்கம், வணிகர்கள் சங்கம். பூ ‘வியாபாரிகள் சங்கம், ஜவுளி வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.
கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், திருவண்ணாமலை மாநகர பகுதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் சாலையோரம் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். மாநகராட்சியில் குப்பை தொட்டிகள் வைக்க அனுமதி இல்லை. எனவே இதனை வணிகர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். வீடு, வீடாக குப்பைகளை வாங்க வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை வழங்க வேண்டும். பூட்டி சீல் வைக்கப்படும் மாநகராட்சி நிர்வாகம் மூலம் குப்பைகளில் இயற்கை உரம் தயார் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்கள் மூலம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். பெரிய ஓட்டல் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் தங்கள் இடத்தில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கலாம். இதற்கு தேவையான பயிற்சிகளை மாநகராட்சிநிர்வாகம் மூலம் வழங்க தயாராக உள்ளோம் என்றனர்.
மேலும் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் எஸ். செல்வபாலாஜியிடம் மாநகர ஹோட்டல்கள் சங்க நிர்வாகிகள் தலைவர் என். விஜயராஜ், செயலாளர் ஏ. நாகராஜன், பொருளாளர் கே. சதீஷ் ஆகியோர் மனு அளித்தனர். இந்த மனு மீது பதிலளிக்கையில் திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் உரிய அனுமதியின்றி தங்கும் விடுதிகள் (ஹோம் ஸ்டே) செயல்படுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே உரிய அனுமதி பெற்று நடத்த வேண்டும். அனுமதியின்றி செயல்பட்டால் சட்டப்படி பூட்டிசீல் வைக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.டி.ஆர். பாபு பேசுகையில் மாநக பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த மாநராட்சி ஆணையாளர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி டீன் மோகன்காந்தி, மாநகர பகுதி பொறுப்பாளர் ஷெரீப், வணிகர் சங்க நிர்வாகிகள் எஸ்.டி. தனக்கோட்டி, இரவிசந்திரன், சங்கர், அம்பிகாபதி சந்திரன், சுகாதார ஆய்வாளர் ரமணன், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பி. தமிழரசி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் டி. தியாகராஜன், கே. கனகராஜ், சி. வெங்கடேசன், சி. முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



