திருப்புவனம், செப். 06 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வளையல் கடை சந்து பகுதியில் பெருமாள் கோவில் செல்லும் வழியில் பொதுப் பாதையை மறைத்து கழிவறை கட்டும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து திருப்புவனம் பாஜக மேற்கு ஒன்றிய தலைவர் ராஜகதிரவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருப்புவனம் பேரூராட்சியில் முக்கியமான பகுதியாக வளையல் கடை சந்து உள்ளது. இப்பகுதியில் ஏராளமான கடைகள் மற்றும் மரச்செக்கு ஆலைகள் உள்ளன. இந்த வழியில் பெருமாள் கோவில் செல்லும் வழி உள்ளது. அந்தப் பாதையில் ஏராளமான பொதுமக்கள் கோவில்களுக்கும் மற்றும் செக்கு ஆலைகளுக்கும் சென்று வருவது வழக்கம். ஆனால் தற்பொழுது திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம் பெருமாள் கோவில் செல்லும் வழியினை மறித்து புதிய கழிப்பறைகளை கட்டி வருகிறது. அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வாகனத்தின் மூலம் பொருட்கள் கொண்டு செல்வதற்கு சிரமம் ஏற்படும் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கும்.
எனவே தற்போது கட்டும் கழிவறையை வேறு இடத்தில் மாற்றி கட்டவில்லை என்றால் திருப்புவனம் பாஜக மேற்கு ஒன்றிய தலைவர் ராஜகதிரவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் மற்றும் கடை வைத்து தொழில் செய்பவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம் வேறு இடத்தில் கழிவறை கட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் வேறு இடத்தில் கழிப்பறையை மாற்றி கட்டுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.



