தருமபுரி, அக். 14 –
தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி பகுதியில் என்.ஆர்.எம்.எஸ் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், வனிதா, சென்னம்மாள், விஜயலட்சுமி, போதுமணி உள்ளிட்ட பெண்கள் 20 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் சென்று பெண்களை அணுகி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி பெற்று தருவதாக பேசி உள்ளனர். இந்த நிலையில் கம்பைநல்லூர், நத்தமேடு, லலிகம், நல்லபள்ளி, மிட்டாரெட்டி அள்ளி, பாகல்பட்டி, முக்கல்நாயக்கன்பட்டி, அச்சல்வாடி உள்ளிட்ட பகுதிகளில் மகளிர் சுய உதவிகளை ஒன்றிணைத்து அந்தந்த பகுதியில் உள்ள வங்கிகளில் முதல் கட்டமாக ஒரு லட்ச ரூபாய் கடன் உதவி பெற்று கொடுத்துள்ளார். இதில் உறுப்பினர் ஒருவருக்கு ஒரு லட்சம் கடன் உதவிக்கு 84,000 மட்டுமே கொடுத்துள்ளனர். 2,000 முதல் 10 ஆயிரம் வரை கமிஷன் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் வங்கி கடன் வாங்கி பெண்கள் மாதந்தோறும் பணத்தை தவறாமல் கட்டி வந்துள்ளனர். ஆனால் சிலரது பணத்தை மட்டும் வங்கியில் செலுத்தி விட்டு, சிலரது பணத்தை செலுத்தாமல் ஏமாற்றி உள்ளனர். இந்த நிலையில் வங்கியில் இருந்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி பெற்ற பணத்தை முழுமையாக செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் பணம் செலுத்தாததால் மகளிர் சுய உதவி குழு பெண்களின் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாத அளவிற்கு முற்றிலுமாக முடக்கி வைத்துள்ளனர். இதனையறிந்த பெண்கள் வங்கியில் நேரடியாக சென்று அணுகி உள்ளனர். அப்பொழுது கடன் பெற்ற தொகை முழுவதுமாக செலுத்தினால் மட்டுமே அனைத்து வங்கி பரிவர்த்தனையும் விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் மாதந்தோறும் கட்டிய பெண்களின் பணம் செலுத்தாதது குறித்து பெண்களுக்கு தெரிய வந்துள்ளது.
இது குறித்து மகளிர் குழுக்கள் இடம் பணம் வசூல் செய்த தொண்டு நிறுவன ஊழியர்கள் வனிதா, சென்னம்மாள், விஜயலட்சுமி ஆகியோரை கேட்டபோது, பணம் கட்டியதாக கூறி, உரிய பதிலை தெரிவிக்கவில்லை. இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குழுக்களைச் சேர்ந்த பெண்களிடம் சுமார் 50 இலட்சம் பணம் ஏமாற்றிய என் ஜீவ ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் ஏமாற்றிய 50 லட்ச ரூபாய் பணத்தினை வசூல் செய்து வங்கியில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை தருமபுரியை சேர்ந்த மணிஷா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.



