திருப்பத்தூர், ஜூலை 4 –
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் இரஞ்சித்குமார் மாவட்ட வளர்ச்சி குறித்த திட்ட பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 01 பயனாளிக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12.88 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், ஆட்சியர் கு.ரவிகுமார் சட்டமன்ற மாவட்ட உறுப்பினர்கள் டாக்டர்.நா.திருப்பதி (திருப்பத்தூர்), ஆ.செ.வில்வநாதன் (ஆம்பூர்), எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் பாஷா (வாணியம்பாடி) மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் நலன் கருதி அடிப்படை தேவைகள் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டுமென ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து, ஆய்வுக் கூட்டம் நடத்தி, அரசு திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான ஆட்சியில், பொதுமக்களுக்கு எந்த ஒரு குறைகளும் இருக்கக் கூடாது. குறிப்பாக குடிநீர், மின்சார வசதி, கழிவுநீர் கால்வாய், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும், மண் சாலைகளை தார் சாலையாக அமைப்பது, சுடுகாட்டு பாதை அமைப்பது போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை கண்டறிந்து, அவற்றிற்கு உடனடி மற்றும் நிலையான தீர்வுகளை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், திருப்பத்தூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சிப்காட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு அலுவலர்களும், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களும் அவ்வப்பொழுது சரி செய்து கொடுக்க வேண்டும்.
தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, குறைதீர்வு மனுக்கள் விவரம், வனத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வேலைவாய்ப்புமற்றும் பயிற்சி துறை, பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை,பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை – உழவர் நலத்துறை. கூட்டுறவுத்துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கால்நடை பராமரிப்புத் துறை, சுற்றுலாத்துறை, நீர்வள ஆதாரத்துறை, பொதுப்பணித்துறை, தோட்டக்கலைத்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்பாக நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வனத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாவட்ட அலுவலக வளாகத்தில், ஆட்சியர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 03 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.114,400/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட நியோ போல்ட்களையும், 09 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,05,000/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகளையும், 02 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையும் (UDID) மற்றும் 01 பயனாளிக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு அட்டை என மொத்தம் 15 நபர்களுக்கு ரூ.12 இலட்சத்து 88 ஆயிரத்து 200/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வனத் துறை அமைச்சர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.நாராயணன், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ. தமிழரசி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) விஜயகுமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், இணை இயக்குநர் மரு.ஞானமீனாட்சி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் முரளி, வேளாண்மை இணை இயக்குநர் மணி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) பூஷண குமார், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் மகாதேவன், முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் செந்தில்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கண்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



