தருமபுரி, ஜூலை 20 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் முருகேசன் வரவேற்பு உரையாற்றினார்கள். மாவட்டத் துணைத் தலைவர்கள் கோவிந்தரசு, துரை ராசு, போராட்டக் குழு தலைவர் ஸ்டாலின் மணி குமார், போராட்டக் குழு செயலாளர் ராம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நியாயவிலை கடைகளின் மூலம் செயல்படுத்தி வரும் தாயுமானவர் திட்டத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பெரும்பாலான இடங்களில் விற்பனையாளர்களாக மகளிர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருவதால் இவ்வாறான பணிகளை இத்திட்டத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு பதிலாக ஒன்றிய அளவில் பயனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு மட்டும் விநியோகம் செய்திட அரசே வாகன வசதி ஏற்படுத்தி அதற்கான பணியர்களையும் நியமனம் செய்து திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தற்போது பணி ஓய்வு பெற்றவர்கள் பெரும் கருணைத்தொகை ரூபாய் ஆயிரம் உயர்த்தி மைய வங்கி பணியாளர்களுக்கு இணையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



