தருமபுரி, ஜூலை 14 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 607 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித்தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மனுக்கள் பெறப்பட்டன. இந்தக் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள் அளவெடுக்கப்பட்டு 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.73 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சரவணன் வழங்கினார். மேலும் வருவாய் துறையின் சார்பில் இரண்டு நபர்களுக்கு ஓய்வூதியத்திற்கான ஆணைகளை அவர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பண்டரிநாதன் உள்ளிட்ட தொடர்புடைய அரசு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



