தருமபுரி, ஜூன் 14 –
தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்விக்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாட்டின் அடுத்த மூன்று ஆண்டுகளில் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித்துறை கூட்டு முயற்சியுடன் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் மூலம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உயர் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பெற்றோர் இல்லாத மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மாணவர்கள், கல்லூரி கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படும். இதே போல் உயர் கல்வி சார்ந்த விழிப்புணர்வு தேவைப்படும் மாணவர்கள், குடும்ப சூழ்நிலை காரணமாக உயர்கல்விக்குச் செல்ல இயலாத மாணவர்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்கள், திருமணம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும். பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளைப் பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற தொழில் சார்ந்த படிப்புகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். உயர் கல்வி தொடர்பான அனைத்து தகவல்களும் இந்தக் கட்டுப்பாட்டு அறையில் வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொள்ள தேவையான உதவிகள் செய்யப்படும். இந்த உயர் கல்வி கட்டுப்பாட்டறையை மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.