சேலம் ஜுன் 25 –
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் காவிரி நீரை குடிநீர் ஆதாரமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து மக்களுக்கும் எவ்வித தங்கு தடையும் இல்லாமல் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது கோடை காலம் என்பதால் பொதுமக்களின் அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் குடிநீர் விநியோகத்தை கண்காணித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பகுதியில் செயல்பட்டு வரும் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 1345 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் இயல்பு நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் தொட்டிப்பட்டியில் இயங்கி வரும் பி. என்.பட்டி- வீரக்கல் புதூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் சுத்திகரிக்கப்பட்ட நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இயல்பு நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், ரெட்டியூரில் செயல்பட்டு வரும் நங்கவள்ளி மேச்சேரி ஒன்றியங்களை சேர்ந்த 698 ஊரக குடியிருப்புகள் மற்றும் பேரூராட்சி களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரத்தை வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சாலை பணிகள் ஏதேனும் மேற்கொள்ளப்படும் போது குடிநீர் குழாய்கள் எவ்வித பழுதும் ஏற்படாமல் கவனத்துடன் பணிகளை மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகத்தில் ஏதும் தட்டுப்பாடு கால தாமதம் அல்லது குடிநீர் குழாய்கள் பழுது போன்ற பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கூறினார்.



