தென்காசி, ஜூலை 13 –
தென்காசியில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய இணைப்பு சங்கங்களில் நிர்வாகிகள் கூட்டம், ஏடிஏஎஃப் அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில களப்பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் என முப்பெரும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட தலைவர் சந்திரதாஸ் தலைமையில், மாநில தலைவர் மகேந்திர குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது மாநில தலைவர் மகேந்திரகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: ஏற்கனவே நாங்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம். அவை நிலுவையில் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றி தர வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். புதிய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்பதற்காக ஆறு மாதங்கள் நாங்கள் எதையும் வலியுறுத்தப் போவதில்லை. இருப்பினும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற ஒரே ஒரு கோரிக்கையை அரசு முதன்மை கவனத்தில் கொண்டு நிறைவேற்றித் தர வேண்டும்.
மேலும் சத்துணவு பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதனை நிறைவேற்ற தவறினால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதிலும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் பழைய அரசுக்கு கொடுத்த நெருக்கடிகளை தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் நாங்கள் கொடுப்போம். எங்களது கோரிக்கைகளை அரசும் கவனத்திற்கு கொண்டு செல்ல ஐஏஎஸ் உட்பட உயர் அதிகாரிகள் மறுக்கிறார்கள். அவர்களை அரசு கண்காணிக்க வேண்டும். எங்களைப் போன்ற சங்கங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்றார்.
இந்த சந்திப்பின்போது அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



