நாகர்கோவில், ஏப். 25 –
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 23ம் தேதி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நடைபெற்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளியூர்களில் குடும்பமாகவும், தனியாகவும் தங்கி இருந்து பணிபுரிந்து வருபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு தேர்தல் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் வருகை புரிந்து சட்டமன்ற தேர்தலில் தங்களுடைய ஜனநாயக கடமையாற்றினர்.
வெளியூர்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லவும், 100% வாக்குப்பதிவு நடைபெறவும் தேர்தல் ஆணையத்தின் மூலம் தேர்தல் நாள் அன்று பொது விடுமுறை வழங்கப்பட்டது மட்டுமல்லாமல், பேருந்து சேவைகளும் தங்கு தடை இன்றி கிடைத்திட மாநில அரசு நடவடிக்கை எடுக்கவும் கூறி இருந்தது. எனவே மாநில அரசு தேர்தலுக்கு முந்தைய நாள் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுத்து இருந்தது. இதனால் வெளியூரில் தங்கி பணிபுரிந்து வரும் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க முடிந்தது.
இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்து மீண்டும் தங்கள் பணி புரியும் இடங்களுக்கு செல்ல நேற்று மாலை முதல் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் வந்து குவிய தொடங்கினர். இதனால் வழக்கத்தை விட அதிகமான கூட்டம் தென்பட்டது. முன்பதிவு செய்தவர்கள் ஒருபக்கம் என்றால் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட முடியாத ஏராளமான பயணிகளும் இவர்களுடன் சேர்ந்தனர். டிக்கெட் மற்றும் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணிப்பவர்கள் என வழக்கத்தைவிட ஏராளமானோர் ஒரே நேரத்தில் பயணிப்பதால் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இது குறித்து பயணி ஒருவர் கூறும்போது அரசு இன்னும் அதிகமான பேருந்துகளை இன்று இயக்கி இருக்கலாம் அவ்வாறு செய்யும்போது குறிப்பிட்ட நேரத்தில் எங்களால் நாங்கள் பணி புரியும் மாவட்டங்களுக்கு செல்ல முடியும். தற்போது கூட்டம் அதிகமாக உள்ளது பேருந்துகளோ குறைவாக காணப்படுகிறது. எங்களுக்கு பேருந்து கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகத்தில் உள்ளோம் என அவர் தெரிவித்தார்.



