தஞ்சாவூர், மே 20 –
தஞ்சாவூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் பயணிகளிடம் போன்பே, ஜிபே மூலம் பணம் செலுத்த வேண்டும் என்று வற்புறுத்த கூடாது என தஞ்சாவூர் முரசொலி எம்.பி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் வழியாகவும் தினம் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட், முன்பதிவு டிக்கெட் என அனைத்து டிக்கெட் சாதனங்கள் நிறுவப்பட்டு உள்ளது. கியூ ஆர் கோடு வை பயன்படுத்தி ஸ்கேன் செய்து போன்பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயல்கள் மூலம் பணம் செலுத்தி பயணிகள் டிக்கெட் பெற்று வருகின்றனர். இதே போல் பணம் செலுத்தியும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பாக டிக்கெட் கவுண்டர்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் உள்ள 4 டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட் வாங்குவதற்கு உள்ள அதிகாரிகள் பயணிகளிடம் கியூ ஆர்கோடுவை பயன்படுத்தி யூ பி ஐ செயலி மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் எனவும், பணம் பெற மாட்டோம் என கூறியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து முரசொலி எம்பி தஞ்சாவூர் ரெயில் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கேட்டார். அப்போது யூபிஐ செயலிகள் மூலம் மட்டுமின்றி பணத்தைப் பெற்றுக் கொண்டும் டிக்கெட் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் எல்லோரிடமும் யூபிஐ செயலிக்களை பயன்படுத்தும் வகையில் செல்போன் இருக்க வாய்ப்பு இல்லை. எனவே பணத்தைப் பெற்றுக் கொண்டு டிக்கெட் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என முரசொலி எம்.பி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: தஞ்சாவூர் விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகப்படியாக கிராமங்கள் உள்ளன. பஸ் பயணத்தை விட ரயில் பயணத்தையே பொதுமக்கள் அதிகளவில் விரும்புகிறார்கள். எனவே தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் டிக்கெட் எடுக்கும் போது போன்பே, ஜிபே மூலம் தான் பணம் செலுத்த வேண்டும் என அறிவிக்க கூடாது. பணத்தைப் பெற்றுக் கொண்டு டிக்கெட் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறியதாக தெரிவித்தார்.



