தருமபுரி, அக்டோபர் 29 –
தருமபுரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான ஒரு நாள் தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைப்பு சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், செந்தில், மாவட்டச் செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10,000 (பத்தாயிரம்) ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் பனிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு கால முறை ஊதியம் ரூ. 15,000 வழங்கிட வேண்டும். 1/6/ 2009 முதல் அரசாணை எண் 234- ன் படி மக்கள் நலப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு கால முறை ஊதியத்தை தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் .தூய்மை காவலர்களுக்கு குடும்ப நலநிதி பிடித்தம் செய்து அவர்கள் இறப்பினை எய்தும் போது ரூ.5,00,000(ஐந்து லட்சம்) வழங்கிட வேண்டும் உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில அமைப்பு செயலாளர் செல்வம் சிறப்புரையாற்றினார்.
மேற்கொண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில் பின்வரும் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நவம்பர் 24 தொடர் கால வரையற்றை வேலை நிறுத்தம் மற்றும் சென்னை ஊரக வளர்ச்சி துறை ஆணையர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறுமென்று தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் லட்சுமணன், சிவலிங்கம், பிரகாஷ், குணசேகரன், முகிலன், சுரேஷ், மோகன் குமார், முத்து, மூர்த்தி, ராமதாஸ், ராஜசேகர், துரைவேல், கோவிந்தசாமி, கிருஷ்ணகுமார், கோவிந்தன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சங்கங்களின் அலுவலர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



