தஞ்சாவூர், அக்டோபர் 7 –
தஞ்சாவூரில் தமிழ்நாடு மராட்டா சங்க வெள்ளி விழா சங்கீத மஹாலில் நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்நாடு மராட்டா சங்கத் தலைவர் விஸ்வஜித் காடேராவ் தலைமை தாங்கினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், மராட்டிய மாநில தொழில் துறை மற்றும் மராத்தி மொழி மந்திரி உதய் சாமந்த் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து இலட்சினை (லோகோ) வெளியிட்டனர்.
பின்னர் அமைச்சர் கோவி.செழியன் பேசிகையில்: மராட்டிய மக்கள் வேறு, தஞ்சாவூர் மக்கள் வேறு அல்ல. பல நூற்றாண்டுகளாக பெருமை சேர்க்கும் இந்த அரண்மனையை பல கி.மீட்டர் தொலைவிற்கு அப்பால் நின்று பார்த்து சொல்லும் நிலை இருந்தது. தற்போது சாதாரண ஏழை எளிய பாமரனும் இந்த அரங்கத்தில் அமர்ந்து மகாராஜா விழாவையும் வெள்ளி விழாவையும் கொண்டாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ள மத ஒற்றுமை மிகுந்த மாநிலம் தமிழ்நாடு. இதை கட்டி காப்பது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்றார்.
பின்னர் மராட்டிய மாநில மந்திரி உதய் சாமந்த் பேசுகையில்: தமிழகத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து கொடுத்தால் அங்கு மராட்டிய மக்களுக்காக மராட்டிய அரசு செலவில் ரூபாய் 5 கோடி செலவில் “மகாராஷ்டிராஸ் பவன்” கட்டித் தரப்படும் என்றார். விழாவில் மராட்டிய மாநில எம்எல்ஏ சுகாஷ்பாபர், தமிழ்நாடு மராட்டியர் சங்கத்திற்கான மராட்டிய பிரதிநிதி கரண் ராவ், முரசொலி எம்பி, டி கே ஜி நீல மேகம் எம்.எல்.ஏ, மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் அரண்மனை இளவரசர்கள் சிவாஜி ராஜா போன்ஸ் லே, பாபாஜி ராஜா போன்சிலே மற்றும் மராட்டிய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.



