தக்கலை, அக். 7 –
திருவட்டார் அருகே உள்ள பொன்மனை பகுதியை சேர்ந்தவர் தங்கம் (55). இவரது மகள் அமலா என்பவர் திருமணம் முடிந்து தக்கலை அருகே உள்ள பெற்ற விளை பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 26 ஆம் தேதி மகளை பார்ப்பதற்காக தங்கம் குலசேகரத்தில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டார். அந்த பஸ் பொற்றயடி விளை சந்திப்பு பகுதியில் வந்த போது இறங்குவதற்காக பஸ் படிக்கட்டு அருகே தங்கம் எழுந்து நின்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக பஸ்ஸில் இருந்து தவறி கீழே விழுந்தது பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனை சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று தங்கம் உயிரிழந்தார்.
இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தானியங்கி கதவு கொண்ட பஸ்சில் படிக்கட்டு கதவு மூடப்படாதது தெரிய வந்தது. இதையடுத்து திருவட்டார் பணிமனை சேர்ந்த டிரைவர் ஜெயக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.



