தக்கலை, ஏப். 13 –
தக்கலை சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையோரம் காமராஜர் அரசு பஸ் நிலையம் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. பழைமையான இந்த பஸ் நிலையம் தற்போது தமிழ்நாடு அரசு கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தில் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.6.39 கோடி மதிப்பில் பணி தொடங்கப்பட்டது.
தற்போது பணிகள் முடிந்து கடந்த மார்ச் மாதம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தக்கலை அரசு பஸ் நிலையத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தற்போது தேசிய நெடுஞ்சாலையோரம் சகல வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பஸ்களும் இந்த பஸ் நிலையத்திற்குள் பயணிகளை ஏற்றி இறக்கி செல்வது வழக்கம். இதனால் தக்கலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவாக காணப்பட்டு வந்தது.
கேரளா அரசு பஸ்களும் நிலையத்திற்குள் பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம்.
ஆனால் தற்போது குறிப்பிட்ட சில கேரள அரசு பஸ் டிரைவர்கள் பஸ் நிலையம் உள்ளே செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் வழக்கம் தொடர்கிறது. இதனால் அந்த பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் இதே போல் ஒரு குறிப்பிட்ட கேரள அரசு பஸ் டிரைவர் சாலை ஓரம் பஸ்சை நடத்தி ஆட்களை ஏற்றி இறக்கினார். இதை பார்த்த அந்த பகுதியில் வாகனங்களை ஓட்டும் டிரைவர் ஒருவர் சென்று அந்த கேரளா அரசு பஸ் டிரைவரை தட்டி கேட்டார். ஆனால் அந்த கேரளா அரசு பஸ் டிரைவர் தரக்குறைவாக பேசிவிட்டு பஸ்சை எடுத்துச் சென்றது என்பது தெரிய வந்தது. தற்போது இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
குமரி மாவட்டத்துக்கு வரும் கேரளாவை சேர்ந்த வாகனங்கள் எந்த அரசு விதிமுறைகளையும் மதிப்பதில்லை என்ற புகார்கள் ஏற்கனவே உள்ளது. தட்டிக் கேட்கும் நபர்களையும், போலீஸ்காரர்களையும் எதிர்த்து நின்று கேள்வி கேட்கும் சம்பவங்களும் காலகாலமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் அமைந்துள்ள பஸ் நிலையத்தில் கேரளா பஸ்கள் உட்பட அனைத்து பஸ்களும் உள்ளே சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல விதிமுறைகள் இருந்தும், குறிப்பிட்ட சில கேரளா அரசு பஸ் டிரைவர்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், குமரி மாவட்டத்தை ஒரு பொருட்டாக மதிக்காமலும் இதுபோன்று தகாத செயல்களை செய்வதாக அப்பகுதி மக்களுடைய பரபரப்பாக பேசப்படுகிறது.
எனவே கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி இந்த விஷயத்தில் தீவிரமாக தலையிட்டு கேரளா மாநில அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, இதுபோன்று அத்துமீகம் கேரளா அரசு பஸ் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



