தஞ்சாவூர், ஜூலை 18 –
குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிவிக்க செல்போன் எண்களை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தை திருமணம் என்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தை திருமண தடை சட்டம் 2006 இன் படி 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கும், 21 வயதுக்கு உட்பட்ட ஆணுக்கும் திருமணம் நடத்துவது அல்லது நடத்த உதவுவது சட்டவிரோதமான செயலாகும்.
குழந்தை திருமணம் குழந்தைகளின் கல்வி, உடல்நலம் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கை கடுமையாக பாதிக்கிறது. குழந்தை திருமணத்தால் பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை இழக்க நேரிடுவதுடன் இளம் வயது கர்ப்பம், உடல்நல பாதிப்புகள் மற்றும் சமூக சிக்கல்களுக்கும் ஆளாகின்றனர்.
18 வயது மேற்பட்ட ஆண் ஒருவர் குழந்தை திருமணம் செய்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூபாய் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும், குழந்தை திருமணத்தை நடத்தி வைக்கும் பெற்றோர், உறவினர்கள் மட்டுமின்றி பாதுகாவலர், நண்பர்கள், திருமணத்தை நடத்தி வைப்பவர், திருமண ஏற்பாட்டாளர் திருமண மண்டப உரிமையாளர்கள், திருமணத்தில் பங்கேற்று ஆதரவளிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் குற்றவாளியாக கருதப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அல்லது ரூபாய் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
குழந்தை திருமணம் நடைபெற உள்ளதாகவோ நடைபெறுவதாகவோ அல்லது அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் அளிப்பவர்கள் குறித்த விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். குழந்தை திருமணம் பற்றி குழந்தைகள் உதவி எண் 1098, மாவட்ட கலெக்டர் 94441 79000, போலீஸ் கண்காணிப்பாளர் 94981 54500, வருவாய் கோட்டாட்சியர் 94450 00465, முதன்மை கல்வி அலுவலர் 97888 58970, மாவட்ட சமூக நல அலுவலர் 91500 57759, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் 63690 45410 மற்றும் அருகில் உள்ள போலீசின் நிலையங்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



