சேலம், ஜூலை 21 –
எல்நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பதால் உருவாகும் இயற்கையாக நிகழும் காலநிலை மாற்றம் ஆகும். இது உலகளாவிய காற்றின் தன்மை மற்றும் மழைப்பொழிவு அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும். பல நாடுகளின் வானிலை மாற்றம் காரணமாக வேளாண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
இந்தியாவில் குறிப்பாக தென்மேற்கு பருவமழையின் தீவிரம் மற்றும் மழைப்பொழிவு பருவ நிலை மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் எல் – நினோ தாக்கத்தின் காரணமாக அதிக வெப்பநிலை மழைப்பொழிவில் காலதாமதம் அல்லது இடைவெளி, சில பகுதிகளில் மழை குறைவு மற்றும் நீர் வள அழுத்தம் போன்ற சூழ்நிலைகள் உருவாக கூடும். இருப்பினும் வடகிழக்கு பருவமழையின் செயல்பாடு உள்ளிட்ட பிற காலநிலை காரணிகளும் மழைப்பொழிவு பாதிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் தாக்கம் ஒரே மாதிரியாக இருக்காது.
சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான பயிர்கள் பருவ மழை மற்றும் நீர் பாசனத்தை சார்ந்துள்ளது. மழை குறைவு அல்லது நீண்ட வறண்ட இடைவெளி ஏற்படும். அதனால் நெல், மக்காச்சோளம், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், மஞ்சள், மரவள்ளி கிழங்கு மற்றும் தோட்டக்கலை பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக மண்ணின் ஈரப்பதம் குறைதல் பாசன தேவைகள் அதிகரித்தல் மற்றும் பூச்சி நோய் தாக்கங்கள் அதிகரிக்கும் சாத்தியம் உண்டு.
எனவே சேலம் மாவட்ட விவசாயிகள் இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் வேளாண்மை துறையின் வானிலை முன்னறிவிப்புகளை கவனித்து அதற்கு ஏற்ப சாகுபடி செய்ய திட்டமிடல் வேண்டும். போதுமான மழை பெய்த பின்னரே விதைப்பு மேற்கொள்ள வேண்டும். வறட்சியை தாங்க கூடிய மற்றும் குறுகிய காலத்தில் மகசூல் தரக்கூடிய பயிர் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகளை பயன்படுத்தி நீரை சிக்கனமாக பயன்படுத்தி மழை நீர் சேகரிப்பு, பண்ணை குட்டைகள் அமைத்தல் வரப்புகள் அமைத்தல் மற்றும் மூடாக்கு போன்ற முறைகளால் மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்க வேண்டும். மண் பரிசோதனை அடிப்படையில் சமச்சீர் உரம் இடல் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வயல்களில் பூச்சி மற்றும் நோய் தாக்கங்களை தொடர்ந்து கண்காணித்து வேளாண் துறையினரின் பரிந்துரைப்படி பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தோட்டக்கலை பயிர்களுக்கு போதுமான ஈரப்பதம் மற்றும் நிழல் பாதுகாப்பும் ஏற்படுத்த வேண்டும். கால்நடைகளுக்கு போதுமான குடிநீர் வசதி, தீவனம் மற்றும் நிழல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சேலம் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டங்களில் பதிவு செய்து அரசின் வேளாண் நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் சந்தேகங்கள் இருப்பின் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம், தோட்டக்கலைத்துறை அல்லது வேளாண் பொறியியல் துறை அலுவலர்களின் ஆலோசனைகளை பெற வேண்டும்.
சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறையினர் காலநிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். விவசாயிகள் அதிகாரப்பூர்வ வானிலை முன்னறிவிப்புகளை மட்டுமே பின்பற்றி அறிவியல் அடிப்படையிலான சாகுபடி முறைகளை மேற்கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.


