சேலம், ஜூன் 3 –
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசால் ஊரகப் பகுதிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் பல்வேறு திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டங்கள் அனைத்தும் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு முழுமையாகவும் விரைவாகவும் கிடைத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 385 கிராம ஊராட்சிகளில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், நபார்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தார் சாலைகள் மற்றும் பல பணிகள் குறித்தும், கனவு இல்லம் திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவது குறித்தும் முதலமைச்சரின் வீடுகள் மறுக்கட்டுமான திட்டத்தின் கீழ் வீடுகள் சீரமைக்கும் பணிகள் குறித்தும் குழந்தை நேய பள்ளி உள்கட்ட அமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டட பணிகள் குறித்தும் தூய்மை பாரத திட்டம், ஜல்ஜீவன் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அதேபோன்று சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம், பொது நிதி, 15 வது நிதி குழு மாநில திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடர்புடைய அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி, செயற்பொறியாளர் அன்பழகன், உதவி இயக்குனர்கள் அருளாளன், லீமா குமார், உதவி திட்ட அலுவலர் சரவணன் உள்ளிட்ட மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



