சேலம், ஜூலை 17 –
பொதுமக்களின் இடங்களுக்கே சென்று குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கு சென்று பணியாற்றும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் சேலம் மாவட்ட பொதுமக்களின் குறைகளை கேட்டு அறியும் திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம் இன்றைய தினம் சேலம் மாவட்டம் மேட்டூரில் தொடங்கப்பட்டது. மேட்டூர் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் மாவட்ட அளவிலான அனைத்து துறை அரசு அலுவலர்கள் இரண்டு தினங்கள் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேட்டூர் வட்டத்தில் களப்பணிக்கு செல்லும் அலுவலர்களால் இன்றைய தினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், சத்துணவுக் கூடங்கள், வேளாண் கிடங்குகள், பள்ளிகள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம், தெருவிளக்குகளின் செயல்பாடுகள், பூங்காக்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள், பொது மற்றும் சமுதாய கழிவறைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேட்டூர் வட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றியம் செம்மனூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வகுப்பறைகள், மாணவ மாணவியர்கள் வருகை பதிவேடு, காலை உணவு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து பார்வையிட்டு மாணாக்கர்களை படிக்க சொல்லி அவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் அரங்கனூர் கால்நடை மருத்துவமனையால் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாள்தோறும் சிகிச்சைக்கு வரும் கால்நடைகளின் எண்ணிக்கை, கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கால்நடை மருத்துவரிடம் கேட்டறியபட்டது.
சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் செயல்படும் புக்கம்பட்டி ஊராட்சி பால் குளிர்விப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பால் கொள்முதல், பால் பரிசோதனை மேற்கொள்ளும் முறை, பால் குளிர்விப்பு உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்தும் கேட்டறியப்பட்டது. முக்கம்பட்டி அரசு துணை சுகாதார நிலையத்தில் மருத்துவ பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது.
அது போன்று மேச்சேரி சார்- பதிவாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் சொத்து ஆவணங்கள், வில்லங்கச் சான்றுகள், விற்பனை பத்திரங்கள் உள்ளிட்ட கோப்புகள் மற்றும் பதிவேடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு விரைவான சேவையினை வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆடு ஆராய்ச்சி நிலையத்தில் ஆடு வளர்ப்பு, தீவனங்கள் மற்றும் ஆராய்ச்சி பணிகள் உள்ளிட்ட வை குறித்து கேட்டறியப்பட்டது. மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் காலை முதல் கள ஆய்வு மேற்கொண்ட அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் ஆலோசனை நடத்தினார்.



