மார்த்தாண்டம், அக். 14 –
மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியிலிருந்து சென்னித்தோட்டம் செல்லும் ரோட்டில் பாலம் அருகே நல்லூர் டவுன் பஞ். இரண்டாவது வார்டில் பொதுமக்கள் குடியிருப்புக்கு இடையே டாஸ்மாக் கடை மற்றும் பார் உள்ளது.
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அகற்ற வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கும் மனு அனுப்பி உள்ளனர். ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்கப்பட்டது.
இது குறித்து இந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது: சென்னிதோட்டம் பாலம் அருகே நல்லூர் டவுன் பஞ். இரண்டாவது வார்டில் டாஸ்மாக் கடை எண் 4828 உள்ளது. நல்லூர் பஞ்சாயத்து விவசாய வயல் நிலத்தில் பஞ்சாயத்து அனுமதி பெறாத கட்டிடத்தில் இந்த டாஸ்மாக் கடை உள்ளது. இதைப்போல் அனுமதி பெறாத கட்டிடத்தில் பார் உள்ளது.
தினசரி பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. இந்தப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளது. பாருக்குள் தகாத வார்த்தைகளால் பேசுவது, சத்தம் போடுவது, போதையில் செய்யும் லீலைகள் அக்கம் பக்கத்தில் இருக்கும் பொது மக்களுக்கு வேதனை அளிக்கிறது.
பார் இருக்கும் கட்டிடத்தின் மாடியில் சென்று பார்த்தால் அனைத்து வீடுகளும் தெரியும். இதனால் பெண்களுக்கு வீட்டின் வெளியே வேலை செய்யவும் துணி துவைக்கவும் முடியாத நிலைமை உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மது அருந்திவிட்டு வீட்டின் வாசலில் சிறுநீர் கழிக்கிறார்கள். மது அருந்து சண்டை சச்சரவுகள் உண்டு. இந்த கட்டிடம் நல்லூர் பஞ். அனுமதி பெறாத கட்டிடம் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிந்து கொண்டோம். எனவே இந்த டாஸ்மாக் கடை மற்றும் பாரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



