சென்னை.ஆக.29.
சென்னையில் 38 வயது பெண் ஹயாத்துன் நிஷா கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆக்ராவுக்கு அனுப்பப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மாணிக் உதின் லஸ்கர் மணிப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸை சோதனையிட்டபோது உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து சென்னை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கூடுவாஞ்சேரியில் நிஷா தங்கியிருந்த வாடகை வீட்டை கண்டறிந்தனர். அங்கு மேலும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் உள்ள ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள காஷிம்பூர் பகுதியில் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் மாணிக் உதின் லஸ்கர் கைது செய்யப்பட்டார். அவரை டிரான்சிட் வாரண்ட் பெற்று தாம்பரத்துக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பகபதி மாஜியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



