திருவெண்ணெய்நல்லூர், அக். 10 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சின்னசெவலை கிராமத்திற்கு சுடுகாட்டு பாதை இல்லாததால் பல ஆண்டுகளாக அந்த கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த சுப்புராயன் மகன் துரைசாமி (70) என்பவர் இறந்ததை அடுத்து அவரது உடலை வைத்து திருவெண்ணெய்நல்லூர் திருக்கோவிலூர் சாலையில் மறியல் செய்யபோவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
இதையடுத்து தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் அந்த கிராம முக்கியஸ்தர்கள், விசிக நிர்வாகிகள் மற்றும் இளைஞர்களிடம் சுமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்கள் முன்னிலையில் அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டம் செய்வதை தற்காலிகமாக கைவிட்டனர்.
மேலும் இறந்தவரின் உடலைநல்லடக்கம் செய்ய கொண்டு செல்லும் போது திருவெண்ணெய்நல்லூர் – திருக்கோவிலூர் சாலையில் இளைஞர்கள் மற்றும் போலீசார் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு பின்னர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறும் போது, சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாமல் பல ஆண்டுகளாக ஆற்றில் நடந்து செல்லும் அவல நிலை இருந்து வருகிறது என்றும், மேலும் சுடுகாட்டு பாதை அமைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்போது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என்றும், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விட்டால் சாலை மறியல் மற்றும் அரசு அலுவலகங்களை முற்றுகையிடுதல் உள்ளிட்ட பல போராட்டங்களை மிகப்பெரிய அளவில் நடத்த உள்ளதாக கூறினார். இதில் காவல் உதவி ஆய்வாளர் செந்தில் முருகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இச்சம்பவத்தால் அந்த கிராமத்தில் பரபரப்பு நிலவியது.



