சிவகங்கை, அக். 13 –
சிவகங்கை நகர் வாரச்சந்தை ரோட்டில் விவேகானந்தர் பள்ளியின் எதிரில் வசித்து வருபவர் பாலமுருகன். இவர் கடந்த 28.09.2025 அன்று இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்துக்கு உள்ளாகி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது டூட்டி டாக்டர்கள் இல்லாமல் பயிற்சி டாக்டர்கள் சிகிச்சை செய்யும்போது ரத்தக் கசிவை முழுமையாக நீக்காத நிலையில் சி.டி. ஸ்கேன் ரிப்போர்ட்டை டூட்டி டாக்டருக்கு பயிற்சி டாக்டர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பியும் டூட்டி டாக்டர் என்ன ட்ரீட்மென்ட் என்று பதில்
சொல்லவில்லையாம்.
பின்னர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துக் கொண்டு வா என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டு மருத்துவமனையில் அந்த ஸ்கேன் வசதி இல்லை. எனவே நீ வெளியில் போய் தனியார் ஸ்கேன் சென்டரில் எடுத்து வருமாறு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் பயிற்சி டாக்டர்களுக்கும் பாலமுருகன் குடும்பத்தினருக்கும் பிரச்சனை ஏற்பட்டதின் காரணமாக பயிற்சி டாக்டர்கள் நடத்திய போராட்டத்தின் அடிப்படையில் சிவகங்கை நகர் போலீசார் பாலமுருகன் குடும்பத்தினரை பல்வேறு வகையில் தொந்தரவு செய்து விசாரணை என்ற பெயரில் செல்போன்களை பிடுங்கிக் கொண்டு அத்துமீறி நடந்து கொண்டதாகவும் பாலமுருகன் தரப்பில் கூறப்படுகிறது.
இந்தக் காரணங்களின் அடிப்படையில் பாலமுருகன் குடும்பத்தில் உள்ள நாகஜோதி, பிவித்ரா, போதும்பொன்னு ஆகிய நான்கு பேரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து திடீரென கையில் வைத்திருந்த கேனை எடுத்து தலையில் உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் விரைந்து சென்று மண்ணெண்ணெய் கேனை பிடுங்கு முயன்றபோதும் அவர்கள் மண்ணெண்ணெய்யை முழுமையாக ஊற்றி முடித்து விட்டார்கள். பின்னர் இவர்கள் தரையில் உருண்டவாறு எங்கள் குடும்பத்தை போலிசிடமிருந்து காப்பாற்றுங்கள் ! காப்பாற்றுங்கள் !! என்று கூச்சலிட்டு கத்தினார்கள். அழுது புலம்பினார்கள்.
இதன் பின்னர் பாலமுருகன் செய்தியாளரிடம் பேசும் போது: நான் காயம்பட்டு உயிருக்கு போராடும் போது மருத்துவமனையில் டூட்டி டாக்டர் இருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. எனக்கு உரிய நேரத்தில் சிகிச்சை செய்யாததால் இப்போது எனது ஒரு கண் பார்வை போய்விட்டது. போலீசார் எங்கள் குடும்பத்தை மிரட்டி பொய் வழக்குப் போடுகிறார்கள். இதனால் ஏழையாக இருக்கும் நாங்கள் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்றார். பின்னர் போலீசார் முதல் உதவிக்காக 108 வேனில் ஏற்றிய போது அவர்கள் மறுத்துவிட்டு வேனில் இருந்து கீழே இறங்கி ஓடினார்கள்.
சிவகங்கை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாதீர்கள் எங்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை. எங்களுக்கு பிரச்சனையே அந்த மருத்துவமனை தான் என்று கத்தினார்கள். இருப்பினும் போலீசார் வலுக்கட்டாயமாக அவர்களை வேனில் ஏற்றிச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் ஒரு மணி நேரம் கடுமையான பரபரப்பு நிலவியது.



