சிவகங்கை, மார். 03 –
சிவகங்கைச் சீமையின் முதல் மன்னரான நாலு கோட்டை சசிவர்ணத்தேவரால் உருவாக்கப்பட்ட பழமையான தெப்பக்குளம் சிவகங்கை நகரின் நடுவில் அமைந்துள்ளது. இந்த தெப்பக்குளத்தில் ஏழாவது ஆண்டாக மாசி மகத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த தெப்ப உற்சவத்திற்காக சிவகங்கை பகுதியில் உள்ள கௌரி விநாயகர் கோயில், சுந்தரராஜபெருமாள் கோயில், பிள்ளை வயல்காளியம்மன் கோயில், வேலு நாச்சியார் கோயில், பெரியநாயகி அம்மன் கோயில், பரமசிவ ஞானகிரி பழனியாண்டவர் கோயில், கைலாச குருநாதர் கோயில், கொட்டகுடி கருத்த காளி கருமாரியம்மன் கோயில் மற்றும் வேலு நாச்சியார் தெருவில் அமைந்துள்ள பழமையான முருகன் கோயில் ஆகிய கோவில்களில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு தெப்ப உற்சவம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் புனித நீர் கலசம் மற்றும் வேல்களை ஏந்தியவாறு பலத்த கோஷங்களோடு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் சிவகங்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள பெண்கள் ஒன்று சேர்ந்து வந்து தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளில் விளக்கேற்றி வழிபட்டனர். விழாவில் சிவகங்கை ராணி , மதுராந்தகி நாச்சியார் சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம். துரைஆனந்த் மேதகு ராணி வேலுநாச்சியார் அறக்கட்டளை சார்பில் கோபால்துரை நகராட்சி கவுன்சிலர் ராஜா, முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் செல்வரங்கன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாகதீபா தலைமையில் சிவகங்கை தெப்ப உற்சவ விழாக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.



