சேலம், ஜுன் 24 –
ஆண்டுதோறும் ஜூன் 26 ஆம் நாள் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு போதை பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து பள்ளி கல்லூரி மாணவர்களிடையே 17.6.2026 முதல் 26.6.2026 வரை ஒரு வார காலத்திற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் போதை பொருட்கள், மனநோய் தூண்டும் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் விநியோகத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. சமூக ஊடகங்கள் இணையம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் இளைஞர்களிடையே போதை பொருட்கள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கத்தோடு சேலம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் இடையே தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு முறை போதை பொருளை எடுத்துக் கொள்ளும்போது அது நமது எண்ணங்களை மாற்றி தொடர்ச்சியாக போதைப் பொருளுக்கு நம்மை அடிமையாக்கும். அவ்வாறு தொடர்ச்சியாக போதைப் பொருளுக்கு அடிமையாகும் போது நமது உடலின் பல்வேறு பாகங்களை செயல் இழக்க வைக்கும். எனவே இது குறித்த விழிப்புணர்வுகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான இந்த விழிப்புணர்வு நடைபெற மாரத்தான், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு கையேடுகள், பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் மூலம் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக கல்வி நிலையங்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுத்தல் மற்றும் அதற்கு அடிமையாவதை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், உதவி ஆணையர் கலால், சேலம் மாநகராட்சி, உணவு பாதுகாப்பு துறை, காவல் துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் போதைப் பொருளுக்கு எதிரான இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஒன்றிணைந்து செயல்பட்டு போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டுமென சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கூறினார்.
இது குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை 24.6.2026 இன்று தொடங்கி வைத்து விழிப்புணர்வு சுவரொட்டிகளை வெளியிட்டு போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியினை சேலம் மாவட்ட ஆட்சியர் வாசிக்க பின் தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.



