கோவை, ஜூலை 25 –
கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில், சி.ஏ.பி.ஐ. 2026 (மேம்பட்ட நுரையீரல் தலையீட்டு சிகிச்சை கருத்தரங்கம்) என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய மருத்துவ கருத்தரங்கம் துவங்கியது. கருத்தரங்கின் துவக்க விழா, மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை நிபுணர்களான டாக்டர் பட்டாபி ராமன், டாக்டர் அர்ஜூன் மற்றும் டாக்டர் மகாதேவன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மாதேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில், தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நுரையீரல் மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள் பங்கேற்று நுரையீரல் மற்றும் ப்ளூரா தொடர்பான நவீன சிகிச்சை முறைகள், புதிய மருத்துவ தொழில்நுட்பங்கள், சவாலான நோய்களுக்கான தலையீட்டு சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விளக்கவுரையாற்றி வருகின்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மாதேஸ்வரன்இதுபோன்ற மருத்துவ கருத்தரங்குகள் இளம் தலைமுறை மருத்துவர்களுக்கு சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்களையும், மேம்பட்ட நுரையீரல் தலையீட்டு சிகிச்சை முறைகளையும் அறிந்து கொள்ள சிறந்த வாய்ப்பாக அமையும் என்றார். மேலும் தற்போது சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து வருவதால் நுரையீரல் தொடர்பான நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், காற்று மாசுபாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு தனிமனிதரின் சமூகப் பொறுப்பும் ஆகும் என வலியுறுத்தினார்.
துவக்க விழாவில் ராயல் கேர் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி தலைமை செயல்பாட்டு அலுவலர் (சி.ஓ.ஓ.) மணி செந்தில் குமார், மூத்த பொது மேலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



