கோவில்பட்டி, செப்.08.
கோவில்பட்டியில் ‘சகாராவை தாண்டாத ஒட்டகம்’ பயிற்சி மையம் சார்பில் இலக்கியச் சாரல் அமைப்பின் 14-வது நிகழ்வாக புத்தகத் திறனாய்வு, சாதனை ஆசிரியர்களுக்கு ஆசிரியச் செம்மல் விருது வழங்கும் விழா, பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் ரக்ஷா பந்தன் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
கி.ரா. நினைவரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இயக்குநர் இந்திராணி அம்மா, நல்லாசிரியர் ஜான்கணேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். முனைவர் பிரபு, வரகவி முருகேசன், பொன்ராஜ் பாண்டியன், எழுத்தாளர் பொன்னுராசு, முனைவர் செல்வம், சுப்புலட்சுமி, ரெங்கலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியை குருலட்சுமி வரவேற்புரையாற்றினார்.
உரத்த சிந்தனை சிவானந்தம் சார்பில் படைப்புச் செம்மல் விருது கவிஞர் தத்துவம் கே.ஆர்.பி. மணிமொழிச்செல்வனுக்கு வழங்கப்பட்டது. முனைவர் முருகசரஸ்வதி, செல்வி ராஜலட்சுமி, கிருஷ்ணன், ஆசிரியர் செந்தில்குமரன் ஆகியோர் புத்தகத்தை திறனாய்வு செய்தனர். தொடர்ந்து, நிறுவனர் தினகரன் சாதனை ஆசிரியர்களுக்கு ஆசிரியச் செம்மல் விருது வழங்கி கவுரவித்தார்.
மேலும், பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் இந்திராணி அம்மா தலைமையில் பங்கேற்ற அனைவருக்கும் ரக்ஷா பந்தன் ராக்கி கயிறு கட்டப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியை மணிமொழி நங்கை, கண்ணகி, பேராசிரியை சிவசங்கரி, ஸ்ருதி, பெருமாளக்கால், அரசி, கழுகுமலை மனோகர், ஆலோசகர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கே.ஆர்.பி. மணிமொழிச்செல்வன் ஏற்புரையாற்றினார். இறுதியில் கவிஞர் போத்திராசு நன்றியுரை கூறி விழாவை நிறைவு செய்தார்.



