கன்னியாகுமரி, பிப். 9 –
அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் தேசிய ஒருங்கிணைப்பாளர்
ஜக்ஜித்சிங் தல்லேவால் தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை விவசாயிகள் யாத்திரை நடைபெற்றது. இதில் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், தலைவர் அய்யாக்கண்ணு, குமரி மாவட்ட செயலாளர் மற்றும் பாசன துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ உள்ளிட்ட 30 பேர் கொண்ட குழு யாத்திரையில் பங்கேற்றனர்.
பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்: விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுக்கிறது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 14 1/2 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்திருக்கிறது. விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் உற்பத்தி பொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்க மறுக்கிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எம்.எஸ். சாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றுவோம், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வோம் என்று அறைகூவல் விடுத்தார்கள். 10 ஆண்டுகாலம் நிறைவு பெற்றுவிட்டது. இதுவரையிலும் அதை நிறைவேற்ற முன்வரவில்லை.
எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி முனையிலிருந்து காஷ்மீர் வரை மிகப்பெரிய யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார்கள். வருகிற மார்ச் 19ஆம் தேதி இந்த யாத்திரை நிறைவாக டெல்லி ராம்லீலா மைதானத்தில் பல லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கிற மாபெரும் பேரணி நடைபெற இருக்கிறது. எனவே ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களின் ஒப்புதலோடு மத்திய அரசு விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்கிற அடிப்படையிலேயே இந்த யாத்திரை இன்றைக்கு புறப்படுகிறது. அனைத்து மாநிலங்களைச் சார்ந்திருக்கிற பிரதிநிதிகள் இங்கே இடம் பெற்றிருக்கிறார்கள். 30 பேர் கொண்ட குழு காஷ்மீர் வரையிலும் செல்ல இருக்கிறது.
10ஆம் தேதி காலையில் சேலத்திலும் மிகப்பெரிய மகாசபை கூட்டங்கள் நடைபெற இருக்கிறது. அடுத்து கர்நாடகாவிற்குள் நுழைய இருக்கிறது. தமிழக முதலமைச்சரை சந்திப்பதற்கு அனுமதி கோரி இருக்கிறோம். அவர் அனுமதி தந்தால் சந்திப்பதற்கு 9-ஆம் தேதி அங்கே அவரைச் சந்திப்போம். பயணம் ஒவ்வொரு மாநில வழியாக காஷ்மீர் வரைச் செல்கிறது. மாநில அரசு மத்திய அரசு எடுக்கக்கூடிய இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். எல்லா மாநில முதலமைச்சர்களையும் சந்திக்க இருக்கிறோம்.
எங்களுடைய தேர்தல் களத்தில் கள் இறக்குவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும், குடிமராமத்துத் திட்டத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும், தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் இதற்கு ஒப்புதல் கொடுக்கிற அரசியல் கட்சிகளுக்கே விவசாயிகள் வாக்களிப்பார்கள் என்கிற தீர்மானத்தையும் நாங்கள் தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்ற உள்ளோம்.
தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்வழிப் பாதைகளை நான்கு வழிச் சாலைகள் அமைக்கிறோம், ரயில் தடங்கள் அமைக்கிறோம் என்கிற பெயரில் ஆக்கிரமிப்புச் செய்கிறார்கள், குளங்கள் ஆக்கிரமிப்புச் செய்யப்படுகிறது. இதையெல்லாம் எதிர்த்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். எனவே உடனடியாக உயர்மட்டக் குழு அமைத்து இந்த பாசன வடிகால்கள் தடுப்பதையும் குளங்கள் ஆக்கிரமிப்பு செய்வதையும் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



