மார்த்தாண்டம், ஜூன் 8 –
கொல்லங்கோடு அருகே உள்ள நீரோடி, கல்லடிதோப்பு பகுதியை சேர்ந்தவர் நிக்கோலஸ் என்பவர் மகன் ஷானு (22). இவர் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் அனிஷ் என்பவர் கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் காமாலை நோயால் இறந்துவிட்டார். நண்பன் இறந்த நாளிலிருந்து ஷானு மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். நண்பர் அனிஷ் சென்ற இடத்திற்கு செல்லப் போகிறேன் எனவும், என்னை யாரும் தடுக்க வேண்டாம் என கூறிவந்துள்ளார். அவருக்கு பெற்றோர் மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறி வந்தனர். ஆனால் அந்த சோகத்திலிருந்து ஷானு மீண்டு வரவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று அதிகாலை 3 மணியளவில் அறையில் மின் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதை அடுத்து பெற்றோர் மின்விளக்கை அணைக்க கதவை தட்டிய போது கதவு திறக்கவில்லை. உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்த போது ஷானு மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்ததும் பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஷானு இறந்த நிலையில் காணப்பட்டார்.
இது குறித்து கொல்லங்கோடு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


