நித்திரவிளை, ஜூன் 24 –
நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியில் இருந்து பயணிகள் ஆட்டோ ஒன்றில் படகுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை கடத்துவதாகக் கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆட்டோவை நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் மஞ்சத்தோப்பு பகுதியில் வைத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றது. உடனே போலீசார் ஆட்டோவை நீண்ட தூரம் துரத்தி சென்று இளம் பாலமுக்கு பகுதியில் பிடித்தனர். உடனே ஆட்டோவில் சோதனை செய்தபோது அதில் படகுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 கேள்களில் 600 லிட்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டோ, மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதி சேர்ந்த டிரைவர் டேனியல் மற்றும் டின்று ஆகிய இரண்டு பேரைப் பிடித்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் ஆட்டோ, மண்ணெண்ணெய், கைதான இரண்டு பேரையும் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.