திருவனந்தபுரம், பிப். 26 –
கேரள மாநிலம் சுகாதாரத் துறை அமைச்சராக வீணா ஜார்ஜ் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் என்பவரை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. அமைச்சர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி காண்பித்து போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அமைச்சர் வீணா ஜார்ஜ் கண்ணூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது அனைத்து நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி காண்பித்து போராட்டம் நடத்தினர். அதன்பிறகு அமைச்சர் திருவனந்தபுரம் திரும்புவதற்காக கண்ணூர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது அங்கும் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் கருப்புக்கொடி காண்பித்து போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டக்காரர்களுடன் வீணா ஜார்ஜ் வாக்குவாதம் செய்தார். இந்த சமயத்தில் மாணவர் அமைப்பினர் அமைச்சர் வீணா ஜார்ஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது கழுத்திலும் கையிலும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் கண்ணூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. சம்பவம் அறிந்தவுடன் கேரளா முதல்வர் பினராய் விஜயன் மருத்துவமனை சென்று வீணா ஜார்ஜை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
இதற்கு இடையே அமைச்சரை தாக்கியதை கண்டித்து மாநில முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென காங்கிரஸ் கட்சியின் கொடிக்கம்பங்கள், பேனர்கள் சேதப்படுத்தப்பட்டன. பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ், சிபிஎம் தொண்டர்கள் நேருக்கு நேர் மோதினார்கள். இந்த நிலையில் நள்ளிரவு கண்ணூர் அருகே கோடியேறி என்ற பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீவைக்கப்பட்டது. இதை அறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று தீய அணைத்தனர்.
இதற்கிடையே அமைச்சரை தாக்கிய காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் 5 பேரும், கருப்புக்கொடி காண்பித்த இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 பேர் என மொத்தம் 15 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



