மார்த்தாண்டம், ஜூலை 17 –
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் சாலையில் மார்த்தாண்டம் அருகே குழித்துறை சந்திப்பு பகுதி உள்ளது. இது குழித்துறை நகராட்சியின் முக்கிய சந்திப்பு பகுதியாகும். இந்த சந்திப்பிலிருந்து குழித்துறை நீதிமன்றம், விளவங்கோடு தாலுகா அலுவலகம் மற்றும் பல அரசு அலுவலகங்கள் செல்லும் முக்கிய சாலை உள்ளது. மேலும் அருமனை, பனச்சமூடு, மற்றும் மலையோர கிராமங்களுக்கும் குழித்துறை சந்திப்பு வழியாக பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்வதால் இந்த பகுதி பரபரப்பாக காணப்படும்.
இந்த பகுதிகளுக்கு செல்பவர்கள் பஸ் ஏற லட்சுமி தியேட்டர் எதிரில் பஸ் நிறுத்தம் மற்றும் உள்ள பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த நிழலகம் தற்போது மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. குறிப்பாக நிழலக தூண்கள் சாய்ந்த நிலையில், எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்துடன் காணப்படுகிறது. இதனால் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு அசம்பாவிதம் நடந்த பின்னரே நடவடிக்கை எடுப்பார்களா என கேள்வி எழுப்பும் பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நிழலகத்தை சீரமைத்து உயிர் ஆபத்தை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



