மார்த்தாண்டம், ஏப். 6 –
குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மரிய பெனடிக்ட் (56) ஆடிட்டர். இவர் தனது குடும்பத்துடன் கடந்த 4ம் தேதி இரவு ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைக்காக வீட்டை பூட்டி விட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு ஆலயத்திற்கு சென்றார். பின்னர் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பின்னர் பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூபாய் 35 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போனது தெரிய வந்தது.
இது குறித்து மரிய பெனடிக்ட் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மரிய பெனடிக்ட் ஆலயத்திற்கு சென்றதை நோட்டமட்ட மர்ம கும்பல் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று முன்பக்க கதவின் பூட்டை திறந்து கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது.
மேலும் திருட்டு நடந்த வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


