மார்த்தாண்டம், செப். 4 –
குழித்துறை நகராட்சி பகுதியில் வெட்டு வெந்நி சந்திப்பில் அரசு மருத்துவமனை உள்ளது. விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த ஆஸ்பத்திரியை பயன்படுத்தி வருகின்றனர். நேற்று அரசு மருத்துவமனையின் உள்பகுதியில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிபெருக்கி பயன்படுத்தி பணி நேரத்தில் ஓண விழா என்ற பெயரில் மருத்துவமனை பணியாளர்கள் குத்தாட்டம் நடத்தினர். ஒலி பெருக்கி பயன்படுத்தப்பட்டுள்ள அதே தளத்தில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு காரணமான மருத்துவமனை பணியாளர்கள் மீது சுகாதாரத் துறையும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்குமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த மருத்துவமனையின் முன்பு சாலையோரம் வாவுபலி பொருட்காட்சி சமயத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியை மாவட்ட ஆட்சியர் அகற்ற உத்தரவு பிறப்பித்து மாற்றப்பட்டது. இந்த உத்தரவுக்காக சமூக ஆர்வலர்கள் பலரும் மாவட்ட ஆட்சியரை பாராட்டிய சூழ்நிலையில் தற்போது மருத்துவமனைக்கு உள்ளேயே இப்படி ஒரு சம்பவம் நடந்தது மிகவும் வேதனையாக உள்ளது என கருத்து தெரிவித்தனர்.
பொதுக்கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களின் போது ஒலிபெருக்கி அமைக்க காவல் துறையில் அனுமதி பெறும்போது மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்களில் அருகில் ஒலிபெருக்கி அமைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் மீறி பெரிய அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் பணியாளர்கள் ஓண விழா என்ற பேரில் குத்தாட்டம் போட்ட சம்பவத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.



