நாகர்கோவில், ஜூன் 13 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தொழிலாளர்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை, மாநில குழந்தை தொழிலாளர் கண்காணிப்புப் பிரிவு சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
நடைபெற்ற விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம்
2009-ஆம் வருடம் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகள் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக்கல்வி அளிக்கவேண்டும் என்ற சீரிய நோக்கத்தினை அடிப்படையாகக்கொண்டு 1986-ம் வருட குழந்தை மற்றும் வளர் இளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இச்சட்டத்தின்கீழ் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவதும் 14 முதல் 18 வயதிற்குட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தினை மீறுவோர்களுக்கு ரூ.20,000- முதல் ரூ.50,000/- வரை அபராதமாகவோ அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக வழங்கப்படும். இச்சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை அல்லது வளர் இளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்தும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் ஆகியோர்களுக்கும் தண்டனை வழங்க இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாம் முறையாக இச்சட்ட விதிகளை மீறும் பட்சத்தில் ரூ.10,000/-வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே இம்மாவட்டத்திலுள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், பேக்கரி மற்றும் உணவு நிறுவனங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணிகளில் அமர்த்துவதோ, வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதோ கூடாது என தெரிவிக்கப்பட்டது. நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர், தொழிலாளர்துறை உதவி ஆணையர் ராஜகுமார், தொழிலாளர்துறை ஆய்வாளர்கள் ஆறுமுகம், மணிமுருகன், பாலசுப்பிரமணியம், அஸ்வினி மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.