ஆசிரியர் தின விழாவில் 65 ஆசிரியர்கள் உறுதிமொழி
சூளகிரி, செப். 8-
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிராமிய பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான பணியை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு ஜே.ஆர்.சி. மண்டல ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அரிமா கோவிந்தசாமி, களப்பணியாளர் வரலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆசிரியர்களின் சமூகப் பங்களிப்பு மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவதில் அவர்களின் முக்கியத்துவம் குறித்து பாராட்டிப் பேசினர்.
தொடர்ந்து, பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. மாணவர்களின் கல்வி வளர்ச்சியுடன், அவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக நலனிலும் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
குழந்தை திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி
விழாவின் முக்கிய நிகழ்வாக, சூளகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை குழந்தை திருமணம் இல்லாத பள்ளியாக உருவாக்குவோம் என பள்ளியில் பணிபுரியும் 65 ஆசிரியர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மேலும், பள்ளி மாணவிகளுக்கு குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், குழந்தை திருமணம் நடைபெறுவதை அறிந்தால் அதனை தடுத்து நிறுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் ஆசிரியர்கள் உறுதியளித்தனர்.
குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என விழாவில் வலியுறுத்தப்பட்டது.
விழாவின் நிறைவில் விமலா நன்றி கூறினார்.



