திருவாரூர், நவம்பர் 26 –
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2000 ஏக்கருக்கும் மேலான விளை நிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையினால், சம்பா – தாளடி சாகுடி செய்யப்பட்ட
இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கி வடிய வழியில்லாமல் அழுகும் நிலையில் உள்ளது. குறிப்பாக திருத்துறைப்பூண்டி வட்டத்தில் கட்டிமேடு வளவனாற்று கரையோரம் சாகுபடி செய்யப்பட்டுள்ள தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது.
அருகில் உள்ள வளவனாற்றில் தேங்கியுள்ள வெங்காயத்தாமரை செடிகளே இதற்கு மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சில இடங்களில் விவசாயிகளே தங்கள் சொந்த செலவில் ஆட்களை கொண்டு செடிகளை அகற்றி வருகின்றனர். இப்பகுதிகளில் மழை மேலும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால்
விவசாயிகள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயி அலீம் என்பவர் கூறுகையில்: கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று
30 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட 20 நாட்களே ஆன இளம் பயிர்கள் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் முழுமையும் மழை நீரில் மூழ்கி உள்ளதாகவும், ஏற்கனவே ஏக்கருக்கு முப்பதாயிரம் செலவு செய்து சாகுபடி செய்துள்ள நிலையில், சொந்தமாக செடிகளை அகற்ற கூடுதல் செலவு ஆவதால் மிகுந்த வேதனையளிப்பதாகவும், தண்ணீரை வடிய வைக்க பொதுப் பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, உரிய கணக்கெடுப்பு செய்து முழுமையாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீட்டு தொகையும், மீண்டு வரும் பயிர்களுக்கு உரிய வழிகாட்டுதலுடன் நுண்ணூட்ட உரங்களை வழங்கினால் உதவியாக அமையுமெனவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.



