குளச்சல், ஜன. 14 –
குளச்சல் அருகே நரிக்கல் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் (47) கூலி தொழிலாளி. இவரும் இவரது நண்பர் கணேசபுரத்தை சேர்ந்த ரவி சுகுமார் என்பவருமாக களிமார் பகுதியில் உள்ள பாலத்தில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கணேசபுரத்தை சேர்ந்த ரமேஷ் (42) மற்றும் லியோ நகரை சேர்ந்த சீலன் என்ற ஆன்றோ, ரமேஷ் மனைவி ஹெலன், அவரது மகன் நிவாஷ் மற்றும் கண்டால் தெரியும் 5 பேர் உட்பட 9பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து, கணேசபுரம் கோயில் கணக்கு வழக்கு தொடர்பாக பரசுராமனிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த 9பேரும் சேர்ந்து பரசுராமனை கல்லால் தாக்கினார்கள். இதனை பார்த்த ரவிக்குமார் தடுக்க முயன்றார். அவரையும் அவர்கள் தாக்கினார்கள். பின்னர் இருவருக்கும் கொலை மிரட்டல் கொடுத்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து சென்றது. காயமடைந்த இருவரும் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் சம்பந்தப்பட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


