குளச்சல், மே. 6 –
கருங்கல் அருகே மிடாலம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சகாய தினேஷ் (29). கடலில் மீன் பிடி தொழில் செய்து வந்தார். நேற்று இரவு மருந்து வாங்குவதற்காக பைக்கில் மிடாலம் – குறும்பனை சாலையில் குளச்சல் நோக்கி சென்று கொண்டிருந்தார். சைமன் காலனி பாலம் அருகில் உள்ள வேகத்தடையில் செல்லும்போது எதிர்பாராத விதத்தில் அவரது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு குளச்சலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் நாகர்கோவில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று சகாய தினேஷ் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி அனிதா செலிதா என்பவர் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்கு ஆய்வு அனுப்பி வைத்தனர். பலியான சகாய தினேஷ் தவெக விஜய் ரசிகராகவும், கடந்த சட்டமன்ற தேர்தலில் தீவிர தேர்தல் பணி செய்தும் வந்தார். இவருக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



