குளச்சல், ஜூலை 8 –
குளச்சல் அருகே வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் இருதய தாசன் (58). இவர் கடந்த 1995 முதல் 2017 வரை 22 வருடங்கள் சவுதி அரேபியாவில் கொத்தனாராக வேலை செய்து வந்துள்ளார். இவரது 3வது மகன் வினிஷ். பிபிஏ பட்டப்படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு வெளிநாட்டில் வேலை தேடி வந்துள்ளனர்.
அப்போது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ராஜன் (55) என்பவர் அறிமுகமாகி, கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி ராஜன் வாணியகுடிக்கு வந்துள்ளார். தொடர்ந்து இருதயதாசன் இடம் தான் சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ முருகன் சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக வேலை செய்து வருவதாக அறிமுகம் செய்து கொண்டார். அப்போது சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்ய தற்போது 20 பேர் தேவை எனவும், ஒரு நபருக்கு 2.50 லட்சம் ரூபாய் செலவு செய்தால் உடனே வேலை தயாராக இருப்பதாகவும் ஆசையை தூண்டி உள்ளார்.
இதை முழுமையாக நம்பியே இருதய தாசன் வினிஷின் பாஸ்போர்ட், ரூ.31 ஆயிரம் உடனடியாக கொடுத்து இருக்கிறார். மேலும் பல தவணைகளாக ஜிபி மூலம் ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் கொடுத்து உள்ளார். ஆனால் 5 மாதங்கள் ஆகியும் சங்கரன்கோவில் இருந்து வந்த ராஜன் இருதய தாசன் மகனுக்கு விசா ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தவிர பலமுறை பணம் கேட்டும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த இருதய தாஸ் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


