குளச்சல், நவ. 6 –
குளச்சலில் காமராஜர் அரசு பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்திலிருந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். மேலும் இரவில் சிலர் தங்கி இருப்பதும் உண்டு. சம்பவ தினம் பெண்கள் சிலர் அந்த பகுதியில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த ஒரு நபர் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்துள்ளார். இந்த சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
உடனடியாக இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி பெண்களிடம் சில்மிஷம் செய்தவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் குளச்சலை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஜவகர் (55) என தெரிய வந்தது. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஜவகர் ஏற்கனவே இதுபோன்ற ஒரு வழக்கில் கைதாகி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



