தஞ்சாவூர், ஜூலை 23 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை தொகுப்பு சிறப்பு திட்டத்தின் கீழ் 44 ஆயிரத்து 160 ஏக்கர் நிலங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றார் வேளாண்துறை இயக்குநர் முரளிதரன்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2வது நாளாக திருவையாறு அருகே விளாங்குடி, காருகுடி, திருப்பனம் ஆகிய கிராமங்களில் ஆய்வு செய்த அவர் மேலும் தெரிவித்ததாவது: காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, கார், சொர்ண வாரி பருவங்களில் மேற்கொள்ளப்படும். நெல்சாகுபடியை ஊக்குவித்து உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026 ஆம் ஆண்டில் ரூபாய் 134.83 கோடி மதிப்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 21.84 கோடி மதிப்பில் 54 ஆயிரத்து 600 ஏக்கர் இலக்க நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 44 ஆயிரத்து 160 ஏக்கர் பரப்பளவு சேர்ந்த விவசாயிகளில் பயன்பெற்று வருகின்றனர் என்றார் முரளிதரன். ஆய்வின் போது வேளாண் இணை இயக்குனர் லெட்சுமி சாந்தன், துணை இயக்குனர் சாருமதி, திருவையாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சிநேகா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



