நாகர்கோவில், ஜூலை 3 –
குருந்தன்கோடு சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தேவைக்காக குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலுள்ள ஒரு பழைய கட்டிடத்தில் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்ந்த ‘வேளாண் விரிவாக்க மைய அலுவலகங்கள்’ செயல்பட்டு வருகின்றன. இரண்டு அறைகளுடன் மிகச்சிறிய பரப்பளவிடான கட்டிடத்தில் 2 துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் உட்பட அலுவலகப் பணியாளர்கள் என 15க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பல்வேறு விஷயங்களுக்காக நூற்றுக்கணக்கான விவசாயிகளும் தினந்தோறும் இங்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
மிகப்பழமையான இந்த கட்டிடத்தினுடைய கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்து , அடிக்கடி பெயர்ந்து விழுவதுடன், உள்ளேயுள்ள கம்பிகள் வெளியே தெரிவதுடன் அவைகளும் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. மேலும், மழை பெய்யும் போது மட்டுமல்ல, மழை நின்ற பிறகும் தொடர்ந்து தண்ணீர் கட்டிடத்திற்குள் ஒழுகுகிறது. இதனால் அலுவலக கோப்புகளும், உபகரணங்களும் நாசமாகின்றன. கட்டிடத்தில் மேல்பகுதியில் ஏராளம் செடி கொடிகள், மரங்கள் வளர்ந்து அவற்றின் வேர்கள் கட்டிடத்தின் கீழ்பகுதி வரை வளர்ந்துள்ளன. தரைப்பகுதிகளும் பக்கச்சுவர்களும் கூட பெயர்ந்த நிலையில் மிகவும் ஆபத்தாக காணப்படுகிறது.
இந்த கட்டிடத்தை அகற்ற எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் அப்பகுதி விவசாய பிரதிநிதிகளான ராஜாக்கமங்கலம் சானல் தலைவர் தேவதாஸ், பூமி பாதுகாப்பு சங்க செயலாளர் தங்கப்பன் உள்ளிட்டோர் பல ஆண்டுகளாக புதிய கட்டிடம் கட்டுமாறும், அதற்கான இடத்தை ஒதுக்குமாறும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பலனாக, கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதன் அருகிலேயே சுமார் 13.5 சென்ட் நிலம் புதிய கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. ஆனால், கட்டிடம் கட்டுவதற்கான நிதியை அரசிடமிருந்து பெறுவதற்கான எந்த முயற்சியையும் வேளாண்மை சார்ந்த துறைகளின் அதிகாரிகள் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக இதுவரை கட்டிடம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையில் கட்டிடம் மேலும் வலுவிழந்த நிலையில் உள்ளது. ஆகவே, அரசு உடனடியாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு உரிய நிதியை ஒதுக்கி, மேற்படி 13.5 சென்று நிலத்தில் கட்டிட வேலையை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிரந்தரமாக புதிய கட்டிடம் கட்டப்படும் வரை தற்காலிக ஏற்பாடாக மேற்படி வேளாண்மைத்துறை அலுவலகங்களை அவ்வளாகத்திலுள்ள வேறு நல்ல அரசு கட்டிடத்திற்கு மாற்றி செயல்பட வைக்கவோ அல்லது தனியார் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து அங்கு அலுவலகங்களை மாற்றவோ வேண்டும். இல்லாவிட்டால, வரும் மழைக்காலத்தில் அரசு அலுவலகத்திற்கு உள்ளேயே உயிர்பலி ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும் என புகார் தெரிவித்து உள்ளனர்.



