நாகர்கோவில், ஜூன் 13 –
நாகர்கோவில் மாநகர் பகுதியில் இயங்கி வரும் ஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நிறுவனத்தில் ரத்த தான தினத்தை முன்னிட்டு அந்நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஜூன் 14 உலக இரத்த தான தினமாக உலக சுகாதார நிறுவனம் கொண்டாடுகிறது. இந்த நாளில் பாதுகாப்பான இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்கும், தன்னார்வ இரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. உயிர்களைக் காப்பாற்றும் பரிசு இரத்த தானம் செய்வதாகும். இரத்த தானம் மூலம் உயிர்களைக் காப்பாற்றியவர்கள் ரத்த தானம் செய்யும் கொடையாளர்கள். நாம் செய்யும் ரத்த தானத்தால் ஒருவருடைய உயிரை நமக்குத் தெரியாமலே நாம் காப்பாற்றுகின்றோம். திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அவசர தேவைகளுக்கு இரத்தம் ஒரு அவசியமான ஆதாரமாகும். உயிருக்கு ஆபத்தான நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நீண்ட காலம் வாழவும், உயர்ந்த வாழ்க்கைத் தரத்துடன் வாழவும் இது உதவியாக இருக்கும். இது சிக்கலான மருத்துவ அறுவை சிகிச்சைக்குப் பெரிதும் பயன்படுகிறது. உலகெங்கிலும் உள்ள சமூகங்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பராமரிப்பதில் இரத்த தானம் செய்பவர்கள் வகிக்கும் பங்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே அரசு ரத்த தானம் செய்வதற்காக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி ரத்த தான முகாம்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாகர்கோவிலில் உள்ள ஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நிறுவனத்தின் பங்கு பெரிதாகப் பார்க்கப்படுகிறது. நடைபெற்ற ரத்ததான முகாமிற்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவர் ராகேஷ் தலைமை தாங்கிக் கொடையாளர்களைப் பரிசோதித்து, உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ரத்ததானம் செய்வதின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் ரத்த வங்கி ஊழியர்கள் செவிலியர்கள் பங்கேற்றனர். “உங்களால் என்ன செய்ய முடியும்?” என்பதற்கு பதில் “இரத்தம் கொடுங்கள்; இப்போதே கொடுங்கள்; அடிக்கடி கொடுங்கள்” என்ற சிறந்த சிந்தனையுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் ஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நிறுவனம்.