நாகர்கோவில், ஜூன் 19 –
குமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை முற்றிலுமாக தவிர்த்து விபத்து இல்லாத குமரி என்ற இலக்கை எட்டும் நோக்கில் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் விபத்துக்கு காரணமான அதிக வெளிச்சம் கொண்ட எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு, வாகன ஓட்டிகளின் கண்களை பறிக்கும் வகையிலான அதிக வெளிச்சம் கொண்ட மின்விளக்கு மற்றும் ஒலி மாசு ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் விதிகளை மீறியதாக 496 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று 3 வது நாளாக இரவிலும் போலீசார அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் போக்குவரத்து ஆய்வாளர் அருண் தலைமையிலான போலீசார் வடசேரி, பார்வதிபுரம் மற்றும் வெட்டூர்ணிமடம் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது விதிகளுக்கு புறம்பாக பயன்படுத்தப்பட்ட 55 ஏர் ஹாரன்களும் 135 எல்இடி விளக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விதிமீறல் ஈடுபட்ட 61 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதே போல் கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 500 மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 340 எல்இடி விளக்குகளும், 70 ஏர் ஹாரன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எல்இடி விளக்குகள் மற்றும் ஏர் ஹாரன்கள் ப போலீசார் பறிமுதல் செய்து வாகன ஓட்டிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முதன்முறையாக ஏர் ஹாரன் பயன்படுத்திய வாகனங்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், 2 வது முறையும் அதே வாகனத்தில் ஏர் ஹாரன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.


