நாகர்கோவில், செப்டம்பர் 8 –
அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 8 வரையிலான இரு வார காலங்கள் கண்தான விழிப்புணர்வு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி இன்று (8ம் தேதி) கண்தான விழிப்புணர்வு வார நிறைவு விழா மற்றும் கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் கௌரவிப்பு விழா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கண்தான மருத்துவமனையில் இன்று காலை நடைபெற்றது. மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் லியோ டேவிட் தலைமை வைத்தார். கண் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் பீனா வரவேற்றார். கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் லியோ டேவிட் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர் ஒவ்வொருவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு கண் தான இரு வார விழா நடக்கிறது. இறந்தவர்களின் உடல்களில் இருந்து கண்களை தானமாக பெற்று கருவிழி பாதிப்பால் கண் பார்வை இழந்தவர்களுக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை கிடைக்கிறது. கருவிழி தானத்தை மக்களிடையே ஊக்குவிக்க வேண்டும், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கண் மருத்துவமனையில் கண் வங்கி செயல்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெபசிங் கிங்ஸ்லி, மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் சுரேஷ் பாலன், உறைவிட மருத்துவர் டாக்டர் விஜயலட்சுமி, உதவி உறைவிட மருத்துவர் டாக்டர் ரெனிமோள், கண் மருத்துவத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் ஜெயலதா மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், டாக்டர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


