கன்னியாகுமரி, மார்ச் 27 –
சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கேசவன்புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கடல் மணற்சிற்பம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
வாக்காளர்கள் அனைவரும் எவ்வித தூண்டுதலுக்கும் இடமளிக்காமல், நேர்மையாகவும், கடமையுணர்வோடும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.
மேலும் அமைக்கப்பட்ட செல்பி பாயின்ட்டில் வாக்காளர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். கடலோரப் பகுதியான கேசவன்புத்தன்துறையில் உள்ள மீனவ மக்களிடமும், கடைவீதிகளிலும் தேர்தல் நாள் மற்றும் வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.



