நாகர்கோவில், ஜூலை 30 –
கருங்கல் அருகே உள்ள மூசாரி என்ற பகுதியை சேர்ந்தவர் தவசிமணி (48). ஆட்டோ டிரைவர். இவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக ஆட்டோவில் சென்றார். அவசர சிகிச்சை பிரிவு அருகே உள்ள விநாயகர் கோயில் பின்புறம் ஆட்டோவை நிறுத்திவிட்டு உறவினரை பார்க்க சென்றுள்ளார்.
பின்னர் அவர் திரும்பி வந்த போது ஆட்டோவில் உள்ள டிராஸ் பாக்ஸ் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் உடனடியாக ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் அளித்தார். அதில் டிராஸ் பாக்ஸில் இருந்த ரூ.8,400 திருட்டு போயிருப்பதாக புகாரில் கூறியிருந்தார். அதன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மக்கள் நடமாட்டம் மிகுந்த குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆட்டோவை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து போலீசார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.


