நாகர்கோவில், ஜூன் 26 –
கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நலம் சிறப்பு செயலாக்கத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் உலக போதை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தின விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தினை பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் விழிப்புணர்வு ஜோதி ஒட்டத்தினை துவக்கி வைத்து கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி பள்ளிக்கல்லூரி மாணவ மாணவியர்களிடையே போதைப்பழக்கத்தினை வேரோடு ஒழித்திடும் வகையில் ”போதையில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில் அரசு மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து பல்வேறு வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
குமரியில் கன்னியாகுமரி, களியக்காவிளை, மார்த்தாண்டம், கல்லுவிளை, முளகுமூடு, தக்கலை, வில்லுகுறி, சுங்கான்கடை, மேல்பாலை, குலசேகரம், அருமனை, சித்திரங்கோடு, கருங்கல். வெள்ளியாவிளை, திங்கள்நகர், பள்ளம், அம்மாண்டி விளை, முட்டம், கடியப்பட்டணம், குளச்சல், கோடிமுனை, குறும்பனை, ஆலஞ்சி, இனையம், ஆரல்வாய்மொழி, அழகப்பபுரம், பெருந்தலைகாடு, தென்தாமரைகுளம், தேரேக்கால்புதூர், வெட்டூர்ணிமடம், ஆசாரிபள்ளம், குருசடி, இராமன்புதூர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 34 இடங்களிலிருந்து பல்வேறுபட்ட அரசு மற்றும் காவல்துறை அலுவலர்களால் ஜோதி ஓட்டம் துவக்கி வைக்கப்பட்டு, வடசேரி அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு வந்தடைந்து.
இவ்வோட்டத்தில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், போதை பழக்கத்தில் இருந்து மீண்டவர்கள் என பல தரப்பினர்கள் இவ்வோட்டத்தில் கலந்துக்கொண்டனர். இவ்வாறு கலெக்டர் கூறினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவரால் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த குறும்படம், விழிப்புணர்வு ஒட்டுவில்லை வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலாபானு, உதவி ஆணையர் கலால் ஈஸ்வரநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



