மார்த்தாண்டம், ஜூன் 15 –
குமரி மாவட்டத்தில் மலையோர பகுதியில் உள்ள கோதையாறு சிறந்த சுற்றுலாத் தலமாகும். மிக அடர்ந்த வனப் பகுதிகளை கொண்ட இந்த பகுதியை பல்லுயிரின வன சரணாலய பகுதியாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். இங்கு கோடைகாலத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
மேலும் கோதையாறு மலைப்பகுதியில் மான், மிளா, காட்டுப்பன்றி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் முண்டந்துறை வனச்சரகத்தை ஒட்டி கோதையாறு அமைந்துள்ளதால் இங்கு புலிகளும் வாழ்ந்து வருகின்றன. கோதையத்தில் அரசு ரப்பர் தோட்டம், 2 நீர்மின் நிலையங்கள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோதையாறு வனப் பகுதிக்கு செல்வதற்கு பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள வன சோதனை சாவடி அருகே உள்ள இடத்தில் அனுமதி சீட்டு கண்டிப்பாக பெற்ற பின் தான் உள்ளே செல்ல முடியும்.
இங்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் குமரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மலையில் உள்ள நீரோடைகள் மற்றும் சிறிய ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, கோதை ஆற்றில் நீர் பிடிப்பு பகுதியாக கொண்ட பேச்சிப்பாறை அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வருகிறது.
இதற்கிடையே கோதையாற்று பகுதியில் சமீபகரமாக அதிக அளவில் யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் மக்கள் வைத்திருந்த உணவுப் பொருட்களை தின்றுவிட்டு சென்றன.
இந்த நிலையில் தொடர் மழை மற்றும் யானைகள் நடமாட்டம் காரணமாக கோதையாறு வனப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பகுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜீரோ பாயிண்டில் டிக்கெட் வழங்கும் இடம் மூடப்பட்டுள்ளது. ஆனால் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் வழக்கம் போல் சென்று வர அனுமதி உண்டு என்று வனத்துறையினர் தெரிவித்தனர். மழை நின்று, தண்ணீர் பெருக்கு குறைந்து, யானைகள் நடமாட்டம் குறைந்த பின்பு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



